புதன், 23 பிப்ரவரி, 2011

நாட்காட்டியில் ஒரு புதிர் விளையாட்டு

குட்டீஸ்
காலண்டர் [நாட்காட்டி]வைத்து ஒரு சின்ன கணக்குப் புதிர் போட்டு உங்க நண்பர்களை அசத்துங்க‌


இப்படி ஒரு நாட்காட்டியை எடுத்துக் கொண்டு உங்க நண்பரிடம் ஒரு சதுர அமைப்பில் உள்ள ஏதேனும் நாலு எண்களை மனதில் நினைத்துக் கொள்ளச் சொல்லுங்க‌
படத்தில் உள்ளது போல நான்கு எண்களும் சதுர அமைப்பில் இருக்க வேண்டும்.பின்னர் அவர் மனதில் நினைத்துக் கொண்ட எண்களின் கூட்டுத் தொகையை மட்டும் உங்களிடம் சொல்லும்படி கேளுங்கள்.


அதிலிருந்து அவர் எந்த நாலு எண்களை மனதில் நினைத்தார் என்பதை நொடியில் சொல்லி விடலாம்.

உதாரணமாக படத்தில் உள்ள சதுரத்தின் கூட்டுத் தொகை=80 [16+17+23+24=80]
ஒரு சின்ன பார்முலா [சூத்திரம்] சதுரத்தின் முதல் எண்ணை n ஆக வைத்துக் கொண்டு அடுத்த‌து n+1 n+7 n+8 ஆக
                       n+n+1+n+7+n+8=(4n+16)  = 80
                                                           4n  = 80-16 =64
                                                                          n=64/4 =16

16 னு ஒரு எண் தெரிந்து விட்டால் 17,23,24 என சதுரத்தின் மற்ற எண்களைச் சொல்லி விடலாம்.


சின்ன அல்ஜிப்ரா கணக்குத்தான்.விளக்கம் தான் பெரிது.மனக் கணக்காப் போட்டா எளிதாகச் சொல்லி விடலாம்.

அதுசரி 16 கண்டுபிடிச்சா அது [16,17,23,24] ஆக இல்லாமல்
[16,17,9,10]      [16,15,8,9]        [16,15,22,23]
 
என எந்தச் சதுர அமைப்பு வேண்டுமானாலும் இருக்கலாமேன்னு சந்தேகம் வருதா? வரக்கூடாதே.....ஏன்னா கூட்டுத் தொகைக்கும் அது ஒத்து வர வேண்டும் சரிதானே...




எங்கே ஒரு நாட்காட்டியை எடுத்துக் கொண்டு உங்க மாய வித்தையைக் காட்டுங்க...இப்போ பரிட்சை நேரமில்லையா?எல்லாம் முடிந்து விடுமுறையில் விளையாடுங்க...:))



வெள்ளி, 2 ஏப்ரல், 2010

துன்பத்தை உதறித் தள்ளு...

ரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார்.அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது. அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப் பட்டது.நடக்கவும் சிரமப் பட்டது. ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது.



எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தார்.கழுதையை மேலே தூக்கிவிடாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விடுவோம் என அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டார்.
கழுதை அப்படியே புதைந்து போகட்டும் என்று எல்லோருமாகச் சேர்ந்து மண்வெட்டி கொண்டு வந்து அருகிலிருந்த மண்ணை வெட்டிக் கிணற்றுக்குள் தள்ளினர்.
ஆரம்பத்தில் தன் மீது விழும் மண்ணைக் கண்டு திகைத்த கழுதை பின்பு சுதாரித்துக் கொண்டது.
தனக்கு நேரும் துன்பத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தால் பயனில்ல்லை.ஏதாவது செய்து தப்பிக்க வேண்டும் என நினைத்தது.
தன் மீதும் விழும் மண்ணை உடம்பைச் சிலிர்த்து உதறியபடியே கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைத்து வெளியே வர முயற்சித்தது.
மேலே இருந்தவர்களும் மண்ணை வெட்டிப் போட்டுக் கொண்டேயிருந்தனர்.தப்பிக்க வேண்டுமென்ற குறிக்கோளே பிரதானமாக இருந்ததால் கழுதையும் வேகமாக மண்ணை உதறி விட்டபடி மேலே ஏறி வந்து விட்டது.
தொழிலாளியும் கழுதையின் விடாமுயற்சியில் வியந்து மனமிறங்கி தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தான்.
மனிதர்களாகிய நமக்கும் பல விதங்களில் சோதனைகளும் துன்பங்களும் வந்து சேரலாம்.அதையே நினைத்து உழன்று கொண்டிராமல் அதை எல்லாம் உதறித் தள்ளி விட்டு மீண்டு வர முயற்சி செய்வதே புத்திசாலித்தனம்.

வாழ்க்கையில் எதற்கு ஆசைப் படுகிறோம்
வாழ்க்கையின் குறிக்கோள் என்ன
எதிகாலக் கனவுகள் என்ன
என்பதை விட அதை நிறை வேற்ற
என்ன செய்ய வேண்டும்
எப்படித் திட்டமிட வேண்டும்
எப்படிச் செயல்பட வேண்டும் என்பதே முக்கியம்

சனி, 26 டிசம்பர், 2009

வாழ்க்கையின் பிரதிபலிப்பு

னைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நம் வாழ்க்கையும் நம்மைச் சுற்றி உள்ளவர்களும் எப்படி இருக்க வேண்டும் என்பது நாம் எப்படியிருக்கிறோம் என்பதைப் பொறுத்ததே.
ஒரு ஊர்ல ஒரு அழகான கண்ணாடி மாளிகை இருந்தது.மாளிகையின் உள்ளே எந்தப் பக்கம் பார்த்தாலும் கண்ணாடிகளே பொருத்தப் பட்டிருந்தன.
ஒரு நாள் நாய்க் குட்டி ஒன்று உள்ளே சென்று பார்த்தது.மாளிகை முழுதும் கண்ணாடி என்பதால் பார்க்கும் இடமெல்லாம் நாய்க் குட்டிகளாகத் தெரியவும் இந்த குட்டி நாய்க்கு சந்தோஷம் வந்தது.தன் வாலை ஆட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்தது.கண்ணாடியில் தெரிந்த நாய்க்குட்டியின் பிம்பங்களும் அதே போல வாலை ஆட்டுவதாகத் தெரிந்தது.அட்டா எத்தனை அன்பானவர்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள்னு நினைத்தபடியே சந்தோஷமாக வெளியே ஓடியது.



அதே ஊரில் இன்னொரு நாய்க் குட்டி இருந்தது.அது கொஞ்சம் முசுடு.யாரோடும் சேராமல் தனித்தே இருக்கும்.அந்த நாய்க்குட்டியும் கண்ணாடி மாளிகையின் உள்ளே சென்று பார்க்க விரும்பியது.கண்ணாடியில் தெரிந்த அதனுடை பிம்பங்களைப் பார்த்ததும் அதற்கு பயமும் வெறுப்பும் வந்ததால் தற்காப்புக்காக முறைத்தபடியே கோபமாகப் பார்த்தது.அதனுடைய பிம்பங்களும் அவ்வாறே திரும்ப முறைக்கவும் அடடா இத்தனை எதிரிகளா எனப் பயந்து வெளியே ஓடி விட்டது.

அன்பை விதைத்தால் அன்பையே அறுவடை செய்யலாம்.வெறுப்பு ,கோபம் இவற்றை விதைத்தால் திரும்பக் கிடைப்பதும் அதுவே.நாம் என்ன செய்கிறோமே அதுவே நமக்குத் திரும்பக் கிடைக்கும்.நம் எண்ணங்களும் செயல்களுமே நம் வாழ்க்கையின் பிரதிபலிப்பு.

செவ்வாய், 15 டிசம்பர், 2009

குருட்டு விழியும் ஓவியமும்


ரு வசதியான பெரிய மனிதருக்கு தன்னை ஓவியமாக வரைந்து பார்க்க வேண்டும் என்று நெடுநாள் ஆசை.அவருக்கு இரண்டு கண்களில் ஒன்றில் பார்வை கிடையாது.பார்ப்பதற்கும் விகாரமாக இருக்கும்.அதனால் தன்னை யார் அழகாக வரைகிறார்களோ அவர்களுக்கு நிறைய சன்மானம் தருவதாகக் கூறினார்.ஆனால் அதே சமயம் ஓவியம் தனக்குப் பிடிக்கவில்லையென்றால் தண்டனையும்  கொடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.
பக்கத்து ஊரிலிருந்து மூன்று ஓவியர்கள் அவரின் நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டு அவரின் ஓவியத்தை வரையத் தொடங்கினர்.

முதலாமவனின் ஓவியத்தில் பெரிய மனிதரின் உருவத்தை அச்சு அசலாக வரைந்திருந்தான்.அந்த ஓவியத்தில் தன்னுடைய குருட்டு விழியைப் பார்த்ததும் தன்னைக் கேலி செய்வதாகக் கோபப்பட்ட பெரிய மனிதர் அவருக்கு 50 கசையடிகள் கொடுக்க உத்தரவிட்டார்.

இரண்டாவது ஓவியனும் அவரை அப்படியே தத்ரூபமாக வரைந்திருந்தான்.ஆனால் அவரின் இரு விழிகளையும் சீர்படுத்தி குருட்டுவிழி தெரியாதபடிஅழகாக வரைந்திருந்தான்.அதைப்பார்த்த பெரிய மனிதர் உண்மையை மறைத்து பொய்யாக தன்னைச் சித்தரித்திருப்பதைக் கண்டு கோபப்பட்டு அவனுக்கு 100 கசையடிகள் கொடுக்கச் சொன்னார்.

மூன்றாவது ஓவியன் அவரின் நேரான உருவத்தை வரையாமல் பக்கவாட்டுத் தோற்றத்தை[புரோஃபைல்] வரைந்திருந்தான்.அவரின் ஓவியம் அழகாக இருந்ததோடு குருட்டு விழியும் பக்கவாட்டில் மறைத்து வரையப்பட்டதால் மனம் மகிழ்ந்த அவர் அவனுக்கு நிறைய சன்மானங்களை வழங்கினார்.

பெரிய மனிதரிடம் குறை இருந்தாலும் அதை சுட்டிக்காட்டாமலும்,பொய்யாக அதை மறைக்காமலும் ,அவரின் நிறையை மட்டுமே கண்டு கொண்டதால் மூன்றாமவனுக்கு பரிசு கிடைத்தது.

சனி, 12 டிசம்பர், 2009

பெட்டி நிறைய முத்தங்கள்

 கிறுஸ்துமஸ்  நெருங்கிக்கொண்டிருந்தது.
பண்டிகைக்குசெலவு செய்யப் பணம்இல்லையென்று அப்பா கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்.
அம்மா வீட்டில் இருந்த பொருட்களைக் கொண்டு கிறுஸ்துமஸ் மரம் அலங்கரித்தாள்.
வீட்டிலிருந்த சின்னப் பெண் தங்க நிற சரிகைத் தாளைக் கொண்டு ஒரு அட்டைப் பெட்டியை அலங்கரித்து கிறுஸ்துமஸ் மரத்தின் அடியில் வைத்தாள்.

பார்த்துக் கொண்டிருந்த தந்தைக்கு கோபம் வந்தது "கையில் சிறிதும் பணமில்லாத இந்த நேரத்தில் ஏன் இப்படி வெட்டிச் செலவு செய்கிறாய்" என மகளைக் கடிந்தார்.

மறுநாள் கிறுஸ்துமஸ்.
குட்டிப் பெண் அந்த அலங்கரிக்கப்பட்ட பெட்டியைத் தந்தையிடம் கொடுத்தாள்.

"அப்பா என்னுடைய சிறிய பரிசு உங்களுக்காக"

நெகிழ்ந்து போன தந்தை முந்தைய நாள் மகளைக் கடிந்து கொண்டதற்காக வருந்தினார்.
ஆவலுடன் தங்கச் சரிகை சுற்றிய பெட்டியைத் திறந்து பார்த்தார்.உள்ளே ஏதும் இல்லை.தந்தைக்கு மீண்டும் கோபம் வந்தது.

"முட்டாள் பெண்ணே யாருக்கேனும் பரிசளித்தால் ஏதேனும் பொருளைக் கொடுக்க வேண்டும் என்பது கூடத் தெரியாதா உனக்கு?"

அழுது கொண்டே மகள் சொன்னாள்"அப்பா இதில் என்னுடைய அன்பான முத்தங்களை நிரப்பி வைத்திருந்தேன்.என்னால் அதை மட்டுமே உங்களுக்குத் தர முடிந்தது"

மனம் நொறுங்கிப் போன தந்தை மகளைத் தன்னோடு அணைத்துக் கொண்டார்.

"என் செல்வமே இதை விடச் சிறந்த பரிசை யாராலும் தர முடியாது.உன்னைக் கோபப்பட்டு பேசியதற்கு என்னை மன்னித்து விடம்மா"என்றார்.

அதன் பிறகு அந்தப் பெட்டியை எப்போதும் தன்னோடே வைத்துக் கொண்டார்.
மகள் பெரியவளாகி மணம் முடித்துச் சென்று விட்ட பிறகும் தனக்கு மனக்கவலையோ பிரச்சனைகளோ வரும்போதெல்லாம் அவர் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்து தன் மகளின் அன்பையும் அன்பு முத்தங்களையும் உணர்வதாக நினைத்துக் கொள்வார்.அவர் வேதனைகளும் தீர்ந்து விடும்.

வியாழன், 10 டிசம்பர், 2009

$ & # = ! ?

தென்ன தலைப்புல டாலர்,ஹேஷ் ,அம்பர்சண்ட் [அண்டு] குறிகள் இருக்கேவென ஆச்சரியமாகவும் கேள்வியாகவும் யோசிக்கிறீங்கதானே?
பங்க்சுவேஷன் எனப்படும் நிறுத்தல் குறிடுயீகள் எப்படி வந்ததுன்னு தெரியுமா?அதுல #   $  &   !? போன்றவை எப்படி உருவாகின என்பது பற்றித் தெரிஞ்சுக்குவோம்.


இந்தக் குறியீட்டைப் பண்டைக்காலத்தில் பிரிட்டனில் thorpe  எனப்படும் வயல்களால் சூழப்பட்ட பண்ணைகள்  கிராமங்களைக் குறிக்கப் பயன் படுத்தினாங்களாம்.  இது எண்முக அமைப்பில் இருப்பதால் 'ஆக்டோதார்ப்' னும் சொல்வாங்க. நாம் இப்போ 'ஹாஷ்' னு சொல்லுவோம்.தொலை பேசிகளிலும் ,செல் பேசிகளிலும், கண்ணி விசை பலகையிலும் இதைப் பார்த்திருப்போம்.இதைpound sign எனவும் சொல்வாங்க.





இது அமெரிக்கப் பணமதிப்பைக் குறிக்கும் டாலர் குறியீடு  என்பது தெரியும்.1700 களில் பணத்தைக் குறிப்பிட பெசோ [peso] எனப்படும் ஸ்பானிஷ் வார்த்தையே புழக்கத்தில் இருந்ததாம்.பின்னாளில் வந்த அமெரிக்க வெள்ளி டாலர்கள் அளவிலும் மதிப்பிலும் பெசோ வை ஒத்திருந்ததால் பழைய குறியீடான  Ps ஐப் பயன்படுத்தி P யின் மீது S எழுதப்பட்டுப் பின் P யின்  வளைவிப் பகுதி மறைந்து Sமீது ஒரு நேர்க்கோடு போல உருவானதுதான் இப்போதுள்ள இந்த டாலர்  $ குறியீடு.




மேலும்[மற்றும்] என்பதை ஆங்கிலத்தில் குறிக்கும்[ ampersand.] என்பது லத்தீன் மொழியில் et    எனப்படும்.இதுவே பின்னர்  உரு மாற்றம் பெற்று . and என அழைக்கப்படுகிறது.
et எப்படி உருமாறி &  amp;   ஆகுது பாருங்க.


1557ல் ராபர்ட் ரெக்கார்டே என்கிற ஆங்கில கணிதவியலார் ஒருவர்தான் இந்த சமம் எனப்படும் 'ஈக்குவல்' குறியீட்டைக் கண்டு பிடிச்சார்.அப்போதைய அதன் அளவு இப்போது இருப்பதை விட  = ஐந்து மடங்கு நீளமாக இருக்குமாம்.இப்படி {=====}  :))
ஆனால் இதை அங்கீகரிக்கப்  பல நூற்றாண்டுகள் ஆனதாம்.



இவ்வளவு நேரம் இந்தப் பதிவைப் படிக்கும் வரை உங்க மனதிலும் இந்தக் குறிதானே இருந்தது.:)) மற்ற பல குறியீடுகளைப் போல இதுவும் லத்தின் மொழியிலிருந்து வந்ததுதான்.'question' எனப்படும்  'questio' என்ற வார்த்தை ஒரு வாக்கியத்தின் முடிவில் வரும் போது கேள்வி கேட்பதாக பதில் வேண்டி நிற்கும்.இதைச் சுருக்கி qo என எழுத அது வாக்கியத்தின் முற்றுப் புள்ளி போலவும் தவறுதலாக பொருள் கொள்ளப்பட்டதால்.q மேலேயும்  o  கீழேயுமாக எழுதப்பட்டு  உருமாறி இப்போதுள்ள கேள்விக்குறி? போல ஆகி விட்டது.



                                                         
exclamation point எனப்படும் இந்த ஆச்சர்யக்குறி io எனப்படும் லத்தீன் வார்த்தையில் இருந்து வந்தது..io  என்றால் ஆச்சர்யம் சந்தோஷம் என்று பொருள். இங்கும் எழுத்துக்களைச் சுருக்கி எழுத  வேண்டி i ஐ மேலேயும்  o வைக் கீழேயும் நீள் வாக்கில் எழுத அதுவே ! குறியாகிப் போனது.

அட இந்தப் பதிவைப் படித்த பின்னர் உங்க மனசுல !!!தானே???          

திங்கள், 7 டிசம்பர், 2009

பாக்லர்ஸ் [bogglers]

பாக்லர்ஸ்(bogglers) என்பது காட்சி சார்ந்த ஒருவகையானப் புதிர்ப் படங்கள்.நாம் சொல்ல விரும்பும் ஒரு ஆங்கில வார்த்தையையோ அல்லது சொற்றொடரையோ ஒரு படத்தின் மூலம் விளங்கிக் கொள்ளச் செய்யும்  மூளைக்கான  ஒரு விளையாட்டு.
முழுக்க முழுக்க வேடிக்கையான அதே நேரம் சிந்தனையைத் தூண்டி நம்மை மண்டையைக் குழப்பும்?:))  ஒரு வார்த்தை விளையாட்டு.
என்னுடைய இன்னொரு வலைப் பதிவில் இதுபோல ஒரு இடுகை ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.

கீழே உள்ள படங்களைப் பார்த்து அவை எந்த வார்த்தை அல்லது சொற்றொடரைக் குறிக்கின்றன என்பதைக் கண்டு பிடிக்க முயற்சி செய்யுங்க.
தெரியாதவற்றைக் கீழே உள்ள பதில் மூலம் தெரிஞ்சுக்கங்க.சரியா?
















 




 



 






 














answers:

working around the clock
Falling Asleep.
Fill in the Blanks.
Forward Thinking
See Eye to Eye
Sit down and Shut up
some where over the rainbow
Rising Tide
The Pen is mighter than the Sword
i forgot to call
First Lady
you 're under arrest
fo(u)rgive and forget
Just between You and Me
Multiplication Tables
you are on time

சனி, 28 நவம்பர், 2009

வாழ்த்துக்கள்

ண்பர்கள் அனைவருக்கும்
தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்



பதிவிட்டவர்:

வியாழன், 3 செப்டம்பர், 2009

பூப்பூவா.... பூத்திருக்கு

குட்டீஸ்
பூக்களையும் பூந்தோட்டத்தையும் யாருக்காவது பிடிக்காமல் போகுமா?
உங்க பூந்தோட்டத்தை நீங்களே உருவாக்கலாம்.
கீழே உள்ள சுட்டியைக் கிளிக்கிப் பாருங்க.
பூந்தோட்டம்
என்ன திரை வெறுமையா இருக்கா?
உங்க எலிக்குட்டியை அங்கு இங்கும் நகர்த்தி சொடுக்குங்க.
எத்தனை அழகான பூந்தோட்டம் நீங்களே உருவாக்கியது பாருங்க.
மகிழ்ச்சிதானே

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

தொடர் எண்கள் புதிர்


1
11
21
1211
111221
312211
13112221
1113213211

இந்த வரிசையில் அடுத்து வரக்கூடிய வரிசை எண்களைக் கண்டு பிடியுங்கள்.
2
12
1112
3112
132112
1113122112
311311222112
இந்த தொடரிலும் அடுத்து வரக்கூடிய வரிசைஎண்களைக் கண்டுபிடியுங்கள்
கண்டுபிடித்து விட்டால்,இது போன்ற எண்களின் தொடர் வரிசையை நீங்களே உருவாக்கலாம்.எத்தனை வரிசைகள் வேண்டுமென்றாலும் எழுதலாம்.


புதிர் விடை:கீழே
.
.
.
.
.
.
.
.
.
.
ஹூம் ஹூம் சொல்ல மாட்டேன்.முயற்சி செய்யுங்கள்.மிக எளிதுதான்.இல்லையென்றால் பிறகு சொல்கிறேன்.

புதன், 19 ஆகஸ்ட், 2009

TFM

சமீப காலமாக சன் தொலைக்காட்சியில் வரும் ஒரு குளியல் சோப்பு விளம்பரம் பார்த்திருப்பீங்க.
நடிகை தமன்னா கிறங்கடிக்கும் குரலில் 'நேச்சர் பவர் சோப்பின் பியூட்டி' எனப் பாடும் விளம்பரம்.பாடலின் முடிவில் 76%TFM இருக்குன்னு முடிப்பார்.
பொதுவா சோப்பு விளம்பரங்களில் நறுமணம்,அழகைக் கூட்டும் தன்மை மட்டுமே பிரதானமாகக் கூறப்படும்.இது என்ன புதிதாக டிஃஎபெஎம் எனத் தெரிந்து கொள்வோம்.
டிஃஎப் எம் [TFM]என்பது குளியல் சோப்பில் உள்ள மொத்த கொழுப்புச் சத்தின் அளவு[Total Fatty Matter].
சோப்பு என்பதே தாவர கொழுப்பு எண்ணைகளிலிருந்து கிடைக்கும் பொருள்தான்.இதில் உள்ள கரிம அணுக்களின் எண்ணிக்கை 15 க்கு மேல் 35 வரையில் இருப்பதால் இவை உயர் கொழுப்பு எண்ணைகள் எனப்படும்.இந்த கொழுப்புச் சத்தின் அளவீட்டைத்தான் டிஃஎபெம் என்கிறோம்.
இயற்கையான தாவரக் கொழுப்புடன் செயற்கைக் கொழுப்புப் பொருளும் சேர்ந்ததுதான் TFM எனப்படும்.இதுவே சோப்பு நீரில் கரையும் போது அதிக அளவு நுரையைத் தருகிறது.
பொதுவாக சோப்பில் 70 முதல் 80 சதவீதம் கொழுப்புபொருளும் 10 முதல் 16 சதவீதம் ஈரப்பதமும் இருக்கும்.
டிஃஎபெம் அளவு 80% க்கு மேல் உள்ளவை உயர்ரக சோப்புகளாக கருதப்படும்.
65-80%உள்ளவை இரண்டாவது ரகமாகக் கருதப்படும்.
சில மூலிகை ஆயுர்வேத சோப்புகள் விதி விலக்கு.
நல்ல தரமான சோப்பில் டிஃஎப் எம் அதிகம் இருக்கும்.
பல நல்ல தரமான சோப்புகள் சந்தையில் கிடைக்கின்றன.மருத்துவர்களாலும் பரிந்துரைக்கப் படுகின்றன.
அதற்காக எல்லாவிதமான சோப்புகளையும் மாற்றி மாற்றி வாங்கி உபயோகிப்பது நல்லதில்லை.மருத்துவர்கள் கூட ஏதேனும் ஒரே வகை சோப்பையே பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்துவார்கள்.
நம் உடலின் துர்நாற்றத்திற்கு பாக்டீரியாக்களே [நுண்ணுயிரிகள்]காரணமாகின்றன.இதில் நல்ல வகை கெட்டவகை இரண்டும் உண்டு.எந்த சோப்பும் குறிப்பிட்டவகை பாக்டீரியாவை மட்டுமே அழிக்கக்கூடியதாக இருப்பதில்லை.ஆனால் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு வகை சோப்பை மட்டுமே பயன்படுத்தும் போது தோல் அதற்கு தகுந்தவாறு ஒத்திசைகிறது.அடிக்கடி சோப்பை மாற்றுவதால் அதில் உள்ள கொழுப்புக் கலவைகள் வேதிப் பொருட்களின் மாறுபாட்டால் தோலில் ஒவ்வாமை ஏற்பட்டு முகப்பரு,தேமல் போன்ற தோல் வியாதிகளுக்கு காரணமாகிறது

இனி குளியல் சோப் வாங்கும் போது எத்தனை சதவீதம் டிஃஎப்எம் எனப் பார்ப்பீங்க தானே

புதன், 5 ஆகஸ்ட், 2009

யோசித்து... செயல்படு

குழந்தைகளே!
நாம் ஏதாவது செய்யும்போது பலபேர் பலவிதமாக பேசுவார்கள்.ஒருவருக்கு சரியென்று படுவது இன்னொருவருக்குத் தப்பாகத் தெரியலாம்.அதனால் நமக்கு எது சரியென்று தேன்றுகிறதோ அதை மட்டுமே செய்ய வேண்டும்.அப்படி நடந்த ஒரு வேடிக்கையைப் பாருங்கள்.

ஒரு தந்தையும் மகனும் ஒரு கழுதையை ஓட்டிக் கொண்டு கடைவீதி வழியாகச் சென்று கொண்டிருந்தனர்.
அதைப்பார்த்த ஒருவர் 'கழுதை சும்மாதானே செல்கிறது.யாராவது ஒருவர் அதன் மீது ஏறிச் செல்லலாமே' என்றார்.
அதுவும் சரியென்று தந்தை மகனை கழுதையின் முதுகில் ஏற்றி விட்டார்.
கொஞ்ச தூரம் போனதும் எதிரே வந்த ஒருவர்,'ஏனப்பா வயதான தந்தையை இப்படி நடக்க வைத்து விட்டு,நீ கழுதையின் மேல் அமர்ந்து செல்வது நியாயமா?' எனக் கேட்டார்.
உடனே மகன் கீழே இறங்கிக் கொண்டு தந்தையை கழுதை மீது அமரச் சொன்னான்.
தந்தையும் அவ்வாறே செய்தார்.இப்படியாக இன்னும் கொஞ்ச தூரம் பயணித்த பிறகு,
இன்னொருத்தர் பார்த்து தந்தையைக் கடிந்து கொண்டார்.
'ஏனய்யா இப்படி சின்ன பிள்ளையை நடக்க விட்டு நீங்கள் கழுதை மேல் பயணிக்கலாமா?'என
தந்தையும் மகனும் ஆளாளுக்கு இப்படிச் சொல்கிறார்களே என்ன செய்வது என பலவாறாக யோசித்து முடிவில் இரண்டுபேருமே ஏறிச் செல்வோம் என கழுதையிம் முதுகில் ஏறிக் கொண்டனர்.

இரண்டு பேருமாக கழுதை மீது அமர்ந்து செல்வதைப் பார்த்த சிலர்,'அடக் கொடுமையே இப்படியா இந்த வாயில்லா பிராணியைத் துன்புறுத்துவார்கள்.இவர்களுக்கு இரக்கமே இல்லையா'?என எள்ளி நகையாட,
மனம் குழம்பிப் போன தந்தையும் மகனும் கழுதையை விட்டு இறங்கியதோடு இல்லாமல்,இருவருமாகச் சேர்ந்து கழுதையைத் தூக்கி தோளில் சுமந்தபடியே நடக்கத் தொடங்கினர்.
இதைகண்டதும் அங்கிருந்தவர்கள் ' இதென்ன கூத்து! இப்படியுமா முட்டாள்கள் இருப்பார்கள் என ஓஹோ என' கூச்சலிட்டு நகைக்கவும் அரண்டு போன கழுதை கீழே குதித்து அவர்களையும் கீழே தள்ளி விட்டு ஓட்டமெடுத்தது.

இப்படி சுயமாக சிந்தித்து முடிவெடுக்காமல் அடுத்தவர் சொல்வதைக் கேட்டதால் தங்களுக்கு அடிபட்டதோடு கழுதையும் ஓடிப் போய்விட்டதே எனக் கவலை பட்டபடியே நடந்தனர்.

எல்லோரையும் ஒரே நேரத்தில் திருப்திபடுத்துவது என்பது இயலாத காரியம்.எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்காமல் நாமாகவே நல்லது எது கெட்டது என்பதை யோசித்து ஒரு காரியத்தில் இறங்க வேண்டும்.

வெள்ளி, 24 ஜூலை, 2009

நான் யார்?

குட்டீஸ்!உங்களுக்காக சில புதிர்கள்.

1.என்னை சத்தமாக அழைக்கும்போது காணாமல் போயிருப்பேன்
நான் யார்?

2.நான் நானாக இருப்பேன்
நான் யாரென்று தெரிந்த பிறகு நானாக இருக்க மாட்டேன்
நான் யார்?

3.பசிக்கு தீனி தந்தால் குஷிதான்.
தாகத்துக்கு நீர் தந்தால் ஓடிவிடுவேன்
நான் யார்?

4.நான் இருந்ததில்லை ஆனாலும் இருப்பவனாக இருப்பேன்.
என்னை யாரும் பார்த்ததில்லை பார்க்கும் முன் பழசாயிருப்பேன்
என்னை நம்பியே இந்த உலகமும் ,மக்களும் நல்லது நடக்குமென
நான் யார்?

5.உனக்கு முன்னாலும் போவேன் பின்னாலும் தொடர்ந்து வருவேன்.
ஆனால் ஒருபோதும் மேலே போக மாட்டேன்

6.என் உடல் முழுவதும் காற்று
ஆனாலும் நான் சுவாசிக்க மாட்டேன்
நான் யார்?

7.என்னைத் தெரியாத போது தெரிந்து கொள்ளும் ஆவல்.
தெரிந்த பிறகு பகிர்ந்து கொள்ளும் ஆசை.
நான் மறைக்கப்பட வேண்டியவன்.
நான் யார்?

8.நொடியில் ஒருமுறை வருவேன்.
வாரத்தில் இரண்டு முறைவருவேன்
மாதத்தில் வராமலே இருப்பேன்
நான் யார்?

9.மேலே மட்டுமே போவேன்;கீழே வரமாட்டேன்
நான் யார்?

10.ஏழைகளிடம் இருப்பவன்;பணக்காரர்களுக்குத் தேவைப்படுபவன்
நான் யார்?
*
*
*
*
*
*
*
*

*
*
*
*
*
*
*
*
*


*
*
*
*
*

*
*
*
*
*

*

*

*


*


*



*



*

**புதிருக்கான விடைகள்:
1.மவுனம் 2.புதிர் 3.தீ 4.நாளை 5.நிழல் 6.பலூன் 7.இரகசியம் 8.'e'என்ற ஆங்கில எழுத்து
9.வயது 10.ஒன்றுமில்லை

வியாழன், 20 நவம்பர், 2008

ட்ரூடுல்ஸ்..[Droodles]..கோட்டுச் சித்திரப் புதிர்கள்

கீழே உள்ள படத்தை பாருங்க.இது என்னன்னு கேட்டா நாலு செவ்வகப் பட்டையும் நடுவில் ஒரு சின்ன வட்டமும் என்று சொல்வீங்க.
ஆனா இது நாலு யானைகள் ஒரு ஆரஞ்சுப் பழத்தைப் பார்க்கின்றன என நான் சொன்னால் சிரிப்பீங்கதானே
இப்படிச் சொல்வதுக்குப் பேர்தான் 'ட்ரூடுல்ஸ் ' புதிர் னு பேர்.

ட்ரூடுல்ஸ் என்றால் என்னன்னு தெரியுமா உங்களுக்கு?ஒருவிதமான கோட்டுச் சித்திரங்கள் புதிர்களாக பயன்படுவது.உண்மையில் இவை அர்த்தமற்ற கிறுக்கல்கள்தான்.
உங்க வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது 'போர்' அடிச்சா என்ன செய்வீங்க?இல்லை வேலை எதுவும் இல்லாம சும்மா இருக்கும் போதோ அல்லது ஏதோ சிந்தித்தபடியே இருக்கும் போது உங்க கையில் ஒரு பேப்பரும் பேனாவும் அல்லது பென்சிலோ கிடைத்தால் எதையாச்சும் கிறுக்குவீங்கதானே. பிறகு அது என்னன்னு பார்த்தா ஆளுக்கொரு விதமா தோன்றும்.அதுக்குத்தான் 'டூடுல்ஸ்' [doodle]னு பேர்.

வீட்டில் போன் பேசும் போது சிலபேர் போன் புத்தகத்தில் எதையாவது வரைவாங்க.சில மாணவர்கள் வகுப்பில் எதையாவது கிறுக்கி ஒரு அவுட்லைன் போல கோடுகள் வரைந்து இது கணக்கு வாத்தியார் இது தமிழ் அய்யா னு குறும்பு செய்வாங்க.
இந்த மாதிரி அர்த்தமற்ற கிறுக்கல்களுக்கு கோட்டுச் சித்திரங்கள் [டூடுல்ஸ்]னு பேர்.
அதையே ஒரு 'புதிர்' [riddle] போல மாற்றி என்னன்னு கண்டு பிடிக்கச் சொன்னால் அதுக்குத்தான் ட்ரூடுல்ஸ் னு பேர்.

டூடுல்ஸ் [doodles] +ரிடில்ஸ் [riddles]=ட்ரூடுல்ஸ் [droodles] சரியா?

இதை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் ரோஜர் ப்ரைஸ் என்னும் காமெடி எழுத்தாளர்.1950 களில் இது குறித்த புத்தகங்களை எழுதினார்.பின்னர் லியனார்ட் ஸ்டெர்ன் என்னும் தன் நண்பருடன் சேர்ந்து மேட் லிப்ஸ் [mad libs] என்னும் கதை சொல்லும் விளையாட்டை உருவாக்கினார்.
அந்தக் காலத்துல தமிழ்வாணன் என்ற தமிழ் நாவலாசிரியர் கூட தன் துப்பறியும் கதைகளில் இப்படி கோட்டுச் சித்திரங்களைப் பயன்படுத்தியிருக்கார்.
பின்னர் தொலைக்காட்சிகளில் 'கேம் ஷோ' எனப்படும் நிகழ்ச்சிகளில் இந்த ட்ரூடுல்ஸ் பிரதான இடம் பிடித்தது.நோட்டுப் புத்தகங்கள் சுவர் விளம்பரங்கள் ஷாப்பிங் பைகள் எல்லாவற்றிலும் இந்த கிறுக்கல் சித்திரங்கள் இடம் பிடித்தன.

முதலில் பார்க்கும் போது அர்த்தமற்ற கிறுக்கள்களாக தெரிந்தாலும் உற்று நோக்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகத் தெரியும் எனவே இந்த வகைப் புதிர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சரியான 'பதில்கள்' இருக்கக் கூடும்.
இந்த வகை விளையாட்டுக்கள் ஞாபக சக்தி,கற்பனைத் திறன்,புதுப் புது சிந்தனைகளை வளர்க்க உதவும்.

உங்க பார்வைக்கு சில கீழே உள்ளன.


இது ஒரு பட்டர்ப்ளை கம்பியில் ஏறுகிறது [அ] ஒரு முக்கோணத்தின் பிம்பம் கண்ணாடியில் தெரிகிறது னும் சொல்லலாம்.


இது i என்ற எழுத்தின் நிழல் [அ] ஐ ஷேடோ [ஒரு முக அலங்காரம்]

இது நேரம் ஐந்து எனச் சொல்கிறது


இது தொப்பி அணிந்த உருவம் [அ] முறுக்கி விடப்பட்ட மீசை


இது கண் பரிசோதனை ஆஸ்பிட்டலில் உள்ள பலகை
[அ] இதில் L என்ற எழுத்து இல்லை.எனவே NO 'L' ஆகும். Noel என்றால் கிறிஸ்துமஸைக் குறிக்கும்.
இது ஒரு கண்ணாடி [அ] மழைத் துளிகள்
இது நீர் தேங்கிய குட்டை [அ] முட்டை தோசை
இது பாரா சூட் [பாதி விலையில் கிடைக்கிறதாம் ஹாஹா]
இது ஹீரோவும் வில்லனும் [அ]நன்மையும் தீமையும் [இடத்துக்குத் தக்கவாறு]
இது டூத் பிரஷ் [அ] ஷூ பாலிஷ் பிரஷ் [அ] தடுப்பு சுவர்[வேலி]
என்ன சுவாரஸ்யமா இருக்கா?சரி .
கீழே கட்டத்தில் உள்ள வரை படங்களைப் பயன்படுத்தி ஒவ்வொருவரும் அவரவர் கற்பனைக்கு ஏற்ப மாற்றி அமைத்து நிறைய புதுப் புது ட்ரூடுல்ஸ் உருவாக்கலாம்.உங்க நண்பர்களோடு விளையாடலாம்.[விடுமுறையில்]

புதன், 12 நவம்பர், 2008

காட்சிப்பிழை

குட்டீஸ்!
காட்சிப்பிழை அல்லது தோற்றப்பிழை என்றால் என்னெவென்று தெரியுமா உங்களுக்கு?அடைத்தான் ஆங்கிலத்தில் 'இல்யூஷன்' 'ஆப்டிகல் இல்யூஷன்' னு சொல்வாங்க.
இங்க கீழேயிருக்கும் படத்தைப் பாருங்க.ஆப்டிகல் இல்யூஷ்ன்னு எழுதியிருக்கா?அதையே இன்னும் கொஞ்சம் கூர்ந்து பாருங்க. ஆப்டிகல் என்று தோன்றும்.



முதல் பார்வையில் சட்டென்று ஒரு தோற்றமும்,கூர்ந்து நோக்கும் போது வேறு தோற்றமும் புலப்படும் நிலைதான் இல்யூஷன் எனப்படுவது.
நமது மூளையும் கண்களூம் சேர்ந்து நம்மை ஏமாற்றும் வேலைதான் அது.
பொதுவாக நமது மூளை எதையும் இப்படித்தான் இருக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்புடனே பார்க்க முனையும் போது கண்களும் அத்துடன் ஒத்துழைத்து பிம்பத்தை புலப்படச் செய்கின்றன.
கீழே உள்ள படங்களில் முதல் படத்தில் TEACHஎன்றும் இரண்டாவது படத்தில் ME என்றும் இருப்பது கூர்ந்து பார்த்தால் LEARN என்றும் YOU என்றும் தெரியும்.




இப்படித்தான் இல்லாததை 'இருப்பதாக கற்பனை 'செய்வதில் மூளைக்கு பெரும்பங்கு இருக்கிறது என்றால் அதற்கு 'ஆமாம் சாமி' போடுவது நம் கண்கள்.
இரவு நேரத்திலும் இருட்டான வேளைகளிலும் 'பேய் பிசாசு இருப்பதாக கற்பனையான எதிர்பார்ப்புடன் நாம் பார்க்க,ஏதேனும் நிழல் தெரிந்தால் கூட கண்கள் அதை பேய்போல சந்தேகத்துடன் பார்க்க பயப்படுகிறோம்.
கீழே உள்ளப் படத்தைப் பாருங்க...
எந்தப் படமும் அசைவதில்லை.அனிமேஷனும் இல்லை.ஆனாலும் உற்று நோக்கினால் சுழல்வது போலத் தோன்றும்.


ஆனால் இந்த மூளையும்,கண்களும் இப்படியாக 'கூட்டு சதி'செய்வதால்தான் தொலைக்காட்சிகளிலும்,கணிணித் திரையிலும் நம்மால் பிம்பங்களையும்,அசையும் படங்களையும் பார்க்க முடிகிறது.
என்ன குட்டீஸ் இப்பவே கண்ணைக் கட்டுதா?

வெள்ளி, 23 மே, 2008

அத்திரி பாச்சா கொழுக்கட்டை

குட்டீஸ்
நல்லா இருக்கீங்களா?விடுமுறையெல்லாம் இனிமையாக கழிந்திருக்கும் என்று நம்புகிறேன்.நானும் அதிக வேலை காரணமாக பதிவு போட முடியலை.
இதோ ஒரு குட்டிக் கதையுடன் உங்களைச் சந்திக்கிறேன்...

ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான்.அவனுக்கு பக்கத்து ஊரில் பெண்ணெடுத்து திருமணம் செய்து வைத்தனர்.
வியாபார விஷயமாக அவன் வெளியூர் சென்று விட்டதால் திருமணம் முடிந்து பலநாள் ஆகியும் அவனால் தன்னுடைய மாமியார் வீட்டுக்கு விருந்துக்குப் போக இயலவில்லை.

பின்னர் ஒருமுறை அவன் வியாபாரம் செய்ய சென்ற ஊரிலிருந்து மிக பக்கமாக அவனுடைய மாமியார் வீடு இருந்ததால் மனைவி இல்லாமல் தான் மட்டும் தனியாக அங்கு போயிருந்தான்.
வெகுநாள் கழித்து விருந்துக்கு வந்த மருமகனை மாமியாரும் நன்கு உபசரித்தாள்.வேளைக்கு ஒரு பலகாரம் செய்து அசத்தினாள்.

அதில் மருமகனுக்கு மாமியார் செய்து கொடுத்த கொழுக்கட்டையே மிகவும் பிடித்தமானதாக இருந்தது.மேலும் மேலும் வேண்டுமென்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டவன் இதுவரை தன் மனைவி அதைச் செய்து தந்ததில்லை என்று அதன் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டான்.
விருந்துக்குப் பிறகு கிளம்பியவன் மறந்து விடக்கூடாது என அந்த பலகாரத்தின் பெயரையே மனனம் செய்து உச்சரித்தபடியே நடந்தான்.

வழியில் குறுக்காக ஒரு வாய்க்கால் இருந்தது.அதைத் தாண்டிச் செல்லும் நோக்கில் குதித்தவன் சட்டென்று 'அத்திரி பாச்சா' என்றான்.
மிகப் பிரயத்தனப் பட்டு கடினமான ஒரு வேலையைச் செய்பவர்கள் இப்படி ஏதாவது வார்த்தையைப் பயன்படுத்துவார்கள்.அது போல இவன் வாய்க்காலைத் தாண்டும் போது 'அத்திரி பாச்சா'எனக் கூற பிறகு கொழுக்கட்டைப் பேரை மறந்து அத்திரி பாச்சா எனக் கூறிக் கொண்டே வீட்டுக்குச் சென்றான்.

மனைவியிடம் மாமியார் செய்து தந்த பலகாரத்தின் சுவையை சிலாகித்துக் கூறியவன் எனக்கு அதே போல அத்திரி பாச்சா செய்து கொடு என்றான்.
மனைவி குழம்பிப் போனாள்.இதென்ன புதுப் பேராக உள்ளது.இப்படியொரு பலகாரம் எனக்குத் தெரியாதே என்றாள்.

கணவன் திரும்பத் திரும்ப அந்தப் பேரைச் சொல்ல மனைவி தெரியாது என்றே கூற கோபமான அவன் அவள் கன்னத்தில் ஓங்கி அறைய கன்னம் வீங்கிப் போனது.

இதைப் பார்த்த அவன் அம்மா அடப்பாவி இப்படி அடித்து கன்னம் கொழுக்கட்டை போல் வீங்கி விட்டதே என
அவன் சந்தோஷத்தில் குதித்தபடி அதேதான்....அந்தப் பேர்தான் கொழுக்கட்டை ...கொழுக்கட்டை என்று குதித்தான்.
இவ்வளவு நேரமும் கணவன் கொழுக்கட்டை என்பதைத்தான் பேரை மறந்து அத்திரி பாச்சா என்றான் என்பதை புரிந்து கொண்டவள் அவனுக்கு நிறையச் செய்து கொடுத்தாள்...

குட்டீஸ் உங்களுக்கும் [அத்திரி பாச்சா] கொழுக்கட்டை பிடிக்கும் தானே?
netoops blog